திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
    கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
    ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
1
கொக்கிற்கு சென்னி யுடையான் கண்டாய்
    கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
    அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
    அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
2
நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
    நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
    பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
3
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
4
உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
    உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
5
தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்
    தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
    புணர்ச்சி பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
    இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
6
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
7
பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்
    பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும வார்சடையெம் பெருமான் கண்டாய்
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
    தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
8
ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
    அலையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
    கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
    பசுவேறிப் பரிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
9
ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
    ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
    விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
    ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
    மழபாடி மன்னும் மணாளன் றானே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
    அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத்
    திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
    நிரைவயிரப் பலகையாற் குலையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
1
அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
    அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு
    வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்
    கனவயிரத் திரள்தூயே கலிசூழ் மாடம்
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
2
உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட
    பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்
    பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
3
ஊனிகந்தூணுறிகையர் குண்டர் பொல்லா
    ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
    நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
    வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
4
சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
    திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
    ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற மறைநான்கும் ஓல மிட்டு
    வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
5
சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
    புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் றனைப்பொருளா ஆண்டு கொண்டு
    தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
    மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
    சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
    என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்
    பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com